வாடாமல்லி
Sunday, January 13, 2008
மறையவில்லை மறக்கவில்லை...
இன்னும் இங்கு தான் உலாத்துகின்றேன்
வெகுவிரைவில் புதிய ஆக்கங்களுடன்
சந்திக்கின்றேன் உங்களுடன்........
posted by நந்தியா @ 7:51 PM 0 comments
Friday, August 10, 2007
கற்பனை அல்ல நிஐம்
அதிகாலை குளிர் காற்று மெதுவாக சின்னதாக திறந்து விட்டிருந்த யன்னல் இடைவெளிக்குள்ளால் உள்ளே வீசிக் கொண்டிருந்தது. குளிருக்கு இதமாக போர்வையை இழுத்து திரும்பவும் உறங்க எத்தணித்த போது கடிகாரம் அலறத்தொடங்கியது. அதை அணைத்துவிட்டுத் திரும்பிப் படுக்க எத்தணித்த போது இன்று சகோதிரியை பாஸ்போர்ட் ஒபிஸ் கூட்டி செல்வதாக கூறியிருந்தது ஞாபகம் வந்தது. போகா விட்டால் கடியோ கடி என்று ஒரு மாதத்துக்கு பல்லவி பாடி கொண்டிருப்பாள் எனது அக்கா.

‘ஆகா இனியும் தூங்கினால் சரிவராது. பாஸ்போர்ட் ஒபிஸ்க்கு போய்விட்டு அப்படியே வேலைக்கும் போக வேண்டும்’ என்ற நினைப்பு கசப்பாய் இருக்க கண்ணைக் கசக்கியவாறே எழுந்தேன். குளித்து வேலை யுனிபோர்ம் ஒன்றைப் போட்டுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு சப்வே ஸ்ரேசனை அடைந்தேன். சிறிலங்கன் பாஸ்போர்ட் ஒபிஸ் டவுண்ரவுண் ஏரியாவில் இருக்கின்ற படியால் அந்த பகுதிகளில் கார் ஓடுவது கடினம். அதுவும் காலையில் சொல்லவே தேவையில்லை. ஆகவே ரெயினில் போவது இலகு என்றாபடியால் சகோதரியை ரெயில்வே ஸ்ரேசனில் சந்திப்பதாக சொல்லியிருந்தேன். சனக்கூட்டம் நிறைந்த அந் நிலையத்தில் ஒருவாறு சகோதரியைத் தேடிப்பிடித்து இருவரும் பயணிக்கத் தொடங்கினோம். எம்மிடம் இருந்த விலாசத்தின் படியே போய் கீழே இருந்த பாதுகாவலரிடம் சிறிலங்கன் எம்பசி எத்தனையாவது தளம் என்று கேட்க அவர் 4 என்று சொன்னார். மேலே போய் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக நேரம் 9:30.

கதவைத் திறந்தவுடன் நேர் எதிரில் இருந்த சுவரில் சிவப்பு சால்வையுடன் மகிந்தாவின் படத்தைப் பார்த்தவுடன் மனதில் ஒரு வேண்டப்படாத இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. 9 மணிக்கு அலுவலகம் திறந்து வேலையை ஆரம்பிக்க வேண்டிய அலுவலர்கள் ஒருவரையும் காணவில்லை. சரியாக 9:35க்கு ஒருவர் மிகவும் அவசரமாக வந்து உள்ளே இருந்த அறையை நோக்கி நடந்தார். அந்த அறையில் குழுமி இருந்தவர்கள் தமிழர்கள் சிங்களவர்கள் மட்டுமன்றி வேறு இனத்தவர்களும்இருந்தார்கள். வந்தவர் ஒன்றுமே சொல்லவில்லை. கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஒரு அறையில் இருந்தவாறே சைகை மூலம்ஒவ்வொருவராக அழைத்தார். அவரின் அந்த செய்கை அங்கு இருந்த அனைவரையும் அருவருக்க வைத்தது. எவ்வளவு சன நெருக்கடியானாலும் வரிசை முறையில் சென்று தேவைகளை நிறைவேற்றப் பழகிக் கொண்ட யாவருக்கும் அவரின் செய்கை அசெளகரியமாக இருந்திருக்கும் என்பது நிச்சயம். அவரின் சைகையைக் கவனித்து கடைசியில் வந்தோர்பலரும் முன் சென்று அவருடன் கதைக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

எமது முறையும் வந்தது. அவரின் முகத்தை அவதானித்தேன். 50 வயது மதிக்கத்தக்கவர். மிகவும் கடுப்பாகவே முகத்தை வைத்திருந்தார். முதலில் அவர் கதைத்த ஆங்கில மொழியின் உச்சரிப்பு எமக்கு விளங்கவில்லை. மிகவும் உன்னிப்பாக கவனித்து தான் பதில் சொல்லி கொண்டிருந்தோம். எனது சகோதரியின் விண்ணப்பப் படிவத்தில் அவரின் மகனையும் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்காக வேறு விண்ணப்பப் படிவம் எடுப்பதோ என்னவோ என்று எமக்கு சரியாகத் தெரியாது . அவர் கனக்க ஏதோவெல்லாம் சொன்னார். அவரின் வார்த்தைப் பிரயோகங்கள் ஒருவரைக் கோபத்தில் ஏசுவது போல் தான் தெரிந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் எடுத்து ஏதோ தான் கனக்க செய்துகொண்டு இருப்பதாக பீலா காட்டி கேள்விகளைத் திருப்ப திருப்ப கேட்க வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் இன்னொரு படிவத்தைத் தந்து நிரப்பச் சொன்னார். சரி என்று நிரப்பப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தவுடன் பக்கத்தில் இருந்த வெள்ளை இனத்தவர் கேட்டமுதல் கேள்வி "whatz wrong with him?" பதில் சொல்ல முடியாமல் இலேசாகச் சிரித்தோம்.

அப்படியே பலரின் கேள்விக்கு மிகவும் முரட்டுத்தனமாகவும் கோபமாகவும் பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. உடனே மிகவும் சத்தமாக Hello என்றார். பொதுவாக அலுவலகங்களில் தொலைபேசி இணைப்புக்கு பதில் அளிக்கும்போது முதலில் மறுமுனையில் இருப்பவரை greet பண்ணிவிட்டு தான் பின்னர் பிரச்சினைகளைக் கேட்பார்கள். இவர் சொன்ன பதில்கள் மறுமுனையில் கதைத்தவர்களுக்கு விளங்கியிருக்குமோ என்னமோ? எமது முறை மீண்டும் வந்தது. எல்லாவற்றையும் சரி பார்த்தார். திரும்பவும் இன்னொரு படிவம் தந்து நிரப்பச் சொன்னார்.(அதை முதலே சேர்த்துத் தந்திருக்கலாம்)

கோபம் வந்தாலும் என்ன செய்வது பாஸ்ப்போர்ட் தேவை என்பதற்காக அவர் சொன்ன யாவற்றையும் கேட்டு செய்துகொண்டிருந்தோம். எல்லாம் முடிந்தது. 600 டொலர்ஸ்ம் கட்டியாச்சு. இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன். Is it ok if anybody can come & pick up the passport? நான் கேள்வி கேட்டவுடன் அவர் கேட்காதமாதிரி இருந்தார். அப்போது அருகில் இருந்த அவரின் உதவியாளார்(அவரும் சிங்களவர் தான்) yes, make sure one of the family membercome and pick it up என்று அவர் சொல்லி வாய் மூடும் முன் இந்த முகாமையாளர் "கட்டவட்ட" என்று தொடர்ந்து ஒரு 2 நிமிடங்கள் அவரை இடைவிடாது சிங்களத்தில் மிகவும் கேவலமாகப் பெரிதாகத் திட்டிக் கொண்டிருந்தார். அவர் திட்டியதில் எனக்கு விளங்கியது எனது அலுவல்களில் நீ தலையிடாமல் வாயை மூடிக் கொண்டு இரு. அந்த உதவியாளாரைப் பார்க்க மிகவும் பரிதபமாக இருந்தது. அங்கு இருந்த அனைவரும் சிறு திகைப்புடன் கண்ணாடி அறையைப் பார்த்தார்கள்.
அவரின் செய்கைகளை நினைக்க என்னுள் பல கேள்விகள். என்னவென்றால் அங்கு அநேகமான தமிழ் மக்கள் கூடியிருந்ததால் அவருக்கு வந்த வெறுப்பு தன்மையால் அப்படி நடந்து கொண்டரா? அல்லது தனது முதாலாளித்தனத்தை அங்கு காட்ட முற்பட்டரா? இலங்கையில் இத்தகைய செயற்பாட்டை சர்வசதாராணமாக காணலாம். ஆனாலும் கடல் கடந்து வந்து மிகவும் உயர்ந்த பதவியில் (அதாவது இலங்கை மக்களை பிரதிபடுத்த கூடியவராக) இருப்பவர் இத்தகைய முறையில் நடப்பது அந்த நாட்டில் மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பைக் குறைத்தே காட்டும் (இல்லாட்டி ஏதோ மரியாதை இருக்கோ என்று நீங்கள் முணுமுணுப்பதுகேட்குது). கதவைத் திறந்து வெளியே வரும்போது தேனிசை செல்லப்பா அவர்களின்"நாங்கள் வேறு நாடு ஐயா நீங்கள் வேறு நாடு ஐயா" என்றா பாடல்வரிகள் நினைவில் வந்தன:-)

Labels:

posted by நந்தியா @ 5:50 AM 2 comments
Sunday, May 6, 2007
7 வயதில் ஏறத் தொடங்கிய மேடை
"எத் தொழிலை செய்தாலும் எந்நிலையில் இருந்தாலும் சித்தத்தை சிவனடியில் வைத்தவர்களே சிவனாடியார்கள்."
இந்த வாக்கியத்தை இந்து சமயத்தவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.
ஆனால் இந்த வாக்கியம் எனக்கு பல வித அனுபங்களை வாழ்க்கையில் கற்றுக் கொள்ள உதவிய வசனம்.
அப்போது 6 வயது இருக்கும். எங்கள் ஊரில் உள்ள சிவபூதராயர் கோவிலில் ஒவ்வொரு மகா சிவராத்திரி தினத்திற்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். அதற்காக 6 வயதில் ஏறிய மேடையில் கதறிய முதல் வசனம் தான் இது. அந்தப் போட்டியில் தொடங்கியது தான். அதற்குப்பின் ஏறிய மேடைகள் எண்ணிலடங்காது.(பரிசுகள் கிடைத்ததோ இல்லையோ என்பது வேறு கதை) பேச்சுப் போட்டிகளில் இருந்து கட்டுரைப்போட்டி வினாடி வினா போட்டி சைவ சமயப்போட்டி கவிதைப் போட்டி அப்படியே பல போட்டிகளில் பங்குபற்ற அடித்தளம் இட்டது அந்த பூதராயர் கோவில் மேடை தான்.
பாடசாலையில் கொத்தனி, கோட்டம், வலையம், மாவட்டம் எனத் தொடந்த போட்டிகள் எண்ணிலடங்காது.

நான் பங்குபற்றிய சில மறக்க முடியாத போட்டிகளை இங்கு நினைவு கூறப்போகின்றேன். வாசித்துப் பாருங்கள். அதே போட்டிகளில் நீங்களும் பங்குபற்றி எங்களிடம் தோற்று புற முதுகு காட்டி ஓடி இருக்கலாம். (எல்லாம் ஒரு வீர வாசனம் தான்)


எங்கள் பாடசாலையில் மூம்மூர்த்திகள் என செல்லமாக பொறமையாக அழைக்கப்பட்டவர்களில் நானும் ஓருத்தி என்று பெருமிதம் அடைந்த காலம் அது. அத்துடன் எதாவது போட்டிகள் என்றாலும் நம்மை கேட்கமாலே பெயரை பதிந்து விடுவார்கள் நம் ஆசிரியார்கள். ஒன்றில் மட்டும் நான் ஸ்கேப் ஆகிவிடுவேன். ஆதாவது ஆங்கிலம் சம்பந்தமான போட்டிகள் என்றால் நான் ஏன் ஆசிரியார்கள் கூட என்னுடைய பெயரை உச்சரிக்க மாட்டார்கள். (இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் அப்போது எனக்கு இருந்த ஆங்கில மொழியின் திறமையை)

1) அப்போது 8ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது நாவலர் தின பேச்சுப்போட்டிக்குரிய விண்ணப்படிவம் எமது பாடசாலைக்கு வந்தது. வழமை போல் ஆசிரியார்கள் எமது பெயரை போட்டு அத்துடன் 5 விதமான தலைப்புகளையும் தந்தார்கள். போட்டி விதி முறைகளில் ஒன்று அவர்கள் அன்று சொல்லும் தலைப்பில் தான் பேச வேண்டும். அதுவும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டி அது. யாழ் இந்துக்கல்லூரியில் தான் போட்டி நடைபெற்றது. அந்தப் பேச்சுக்களை வாங்கி அதை அப்படியே எமது கொப்பிகளில் எழுதி விட்டு நாங்கள் எங்களுடைய மற்றவேலைகளை கவனித்து கொண்டிருந்தோம். போட்டிக்கு ஒரு கிழமை முன் வகுப்புக்கு வந்த சமய பாட ஆசிரியார் 3பேரையும் எழுப்பி ஒரு தலைப்பை சொல்லி வகுப்புக்கு முன்னால் பேசும்படி கூறினார். முழிப்பதை தவிர வேறு வழி எமக்கு அப்போ தெரியவில்லை. உடனே மூவரையும் வெளியில் அழைத்து ஒவ்வொரு துணுடன் நிறுத்தி அந்த தலைப்புக்குரிய பேச்சை பாடமாக்கி சொல்லிவிட்டு தான் உள்ளே வரவேணும் என்று கட்டளை (சத்தியமாக அது அன்புக் கட்டளை இல்லை). அந்த நாள் முழுவதும் அந்த தூணை கட்டிப்பிடித்துக் கொண்டு எல்லோரும் வினோதமாக பார்த்து கொண்டு போக பாடமாக்கினோம். (படமாக்கினோம் என்பதை விட வேடிக்கை பார்த்தது தான் கூட) கடைசியில் 5 தலைப்பையும் ழுழுமையாக படமாக்கி (கரைத்து குடித்து ) விட்டுத் தான் போட்டியில் பங்குபற்றினோம். ஆனால் முதல் 3 இடத்திற்குள் வர முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம்

அடுத்தாக 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது திருவள்ளுவர் விழா பேச்சுப்போட்டி. யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றான இருபாலை பிள்ளையார் கோவிலில் நடந்தது. அது வயதின் அடிப்படையில் நடந்தது. ஆகவே எங்கள் பிரிவில் 16 வயது வரை பங்கு பற்றினார்கள். இந்த வயது விபரம் பற்றி நமக்கு யாரும் சொல்லவில்லை. நாழும் ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி கத்து கத்து என்று கத்தி நமது கத்தலை கேட்டு பக்கத்து வீட்டுக்காரரையும் எழும்பி எங்கள் சுக்ரபாதத்தை கேட்கட்டும் என்று கத்தி பாடமாக்கினோம். மண்டபத்துக்குள் போய்பார்த்தால் பெரிய அக்காமார்கள் அண்ணாமார்கள் எல்லாரும் எங்கள் பிரிவினார் உள்ள மண்டபத்தில் இருக்கினம். என்ன என்று கேட்டால் அவர்களும் எங்கள் பிரிவில் பேசபோகினமாம். அதைக் கேட்டு பிடித்த நடுக்கம் தான். பின்னார் நடந்த பேச்சுப்போட்டிகளில் எல்லாம் அந்த நடுக்கம் வந்து போனது.

அடுத்து எமது ஊர் ஞானவைரவர் கோவிலில் நடந்த திருக்குறள் மனனப் போட்டி. எங்கள் பிரிவினருக்கு முதல் 20 குறள்களும் படமாக்கி அதன்பொருளையும் சொல்லவேண்டும். அதில் எங்களை விட வயது குறைந்தவர்கள் எம்முடன் பங்குபற்றினார்கள். அந்த செய்தி எமக்கு மிக்க சந்தோசம். வெற்றி நமக்கு தான் என்று வீராய்ப்பு வேறை. போட்டி போட்டு கொண்டு வந்து கடைசியாக முதல் மூன்று இடங்களுக்குரிய போட்டி நடந்தது. அதில் போட்டிகள் மிக மும்மரமாக நடந்து கடைசிவரைக்கும் போட்டி போட்டு கொண்டிருந்ததவர் என்னை விட வயதில் குறைந்த பக்கத்து விட்டுப் பையன். நடுவர்கள் மாறி மாறி கேள்வி கேட்க இருவரும் பதில்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். கடைசியில் நடுவர்கள் பூவா தலையா போட்டு இரண்டாவது மூன்றாவது பரிசில்களை கொடுத்தார்கள். அப்போது தான் புரிந்தது திறமையோடு கொஞ்சம் அதிஷ்டமும் நம்ம பக்கம் வீசவேண்டும் என்று.

இன்னும் சுவையான போட்டி அனுபவங்கள் இருக்கு. கனக்க எழுதி போரடிக்கமால் அடுத்த பதிவில் இடுகின்றேன்..


Labels:

posted by நந்தியா @ 8:14 PM 3 comments
Tuesday, May 1, 2007
அம்மா கிடைக்குமா?

தபால்பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்தாள் சுமதி. வேலைக்கும் நேரம் ஆகின்றது... அட எதிர்பார்த்தால் தான் எப்பவும் லேட்டாகத்தான் வருவான் இந்த தபால் காரன் என்று நினைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டாள்.
அதே நினைப்பில் இருந்தவளுக்கு வேலையிலும் நிம்மதியாக இருக்க முடியலை. வந்திருக்குமோ வந்திருக்குமோ என்று ஏக்கிக் கொண்டிருந்தாள். வரவில் போடவேண்டியதை செலவில் இட்டு மனேஐரிடம் திட்டும் வாங்கிகொண்டாள். தலையிடி என்று சாட்டு சொல்லி விட்டு அவசரமாக வீடு திரும்பிளாள்.

பாதையிலும் பல நினைவுகள் அவளுக்கு.... வந்திருக்குமா? என்று. அம்மாவிற்கு போன் பண்ணி கேட்டுவிடலாமோ என நினைத்து கைத்தொலைபேசியை எடுத்தாள். "சீ அம்மாவை இனியும் போன் பண்ணி கேட்டால் போனிலே அடித்து விடுவா" என்று நினைத்து வைத்து விட்டாள். " என் ஏக்கம் யாருக்கு புரியப்போகின்றது" என்று ஏக்க பெருமூச்சு விட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

ஸூ கழட்ட முன் தாபல்பெட்டியை பார்த்தாள். வாவ் !!!!!!!! என்று துள்ளிக்குதித்தாள். இவ்வளவு நேரமும் யாருடைய கடிதத்துக்காக காத்திருந்தாளோ அந்த அழகிய கையெழுத்துடன் ஒரு கடித உறையை கண்டாள். நச்சென்று அதுக்கு ஒரு முத்தமும் கொடுத்தாள். விரைந்து சென்று ஸூ கழட்டி விட்டு நேராக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள்.

இவற்றை எல்லாம் சோபாவில் இருந்து அவதானித்த அம்மா "ம்ம் வந்திட்டுது அக்கும் இனி இவளுக்கு இரண்டு மூன்று நாளைக்கு சாப்பாடு தேவையில்லை". அது அவளின் வழமையான நச்சரிப்புத்தான். சுமதி அதை கண்டு கொள்ளவில்லை. உள்ளே சென்ற சுமதி கடிதத்தை உடைத்தாள். ம்ம்..... ஆளைப்போல கையெழுத்தும் அழகு தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு கடிதத்தை வாசிக்க தொடங்கினாள். அந்த நேரத்தில் "நினைத்து நினைத்து உருகினேன்......உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன" என்ற பாடலின் ஒலியுடன் கைத் தொலைபேசி அலற.... . சீ நிம்மதியாய் ஒரு கடிதம் கூட படிக்க வழியில்லை என்று நினைத்தபடி தொலைபேசியை எடுத்து "யாராய் இருந்தாலும் சுருக்கமாய் ஒரு வரியில் கதையை கூறி விட்டு வையுங்கள்" என்று கூறிக் கொண்ட இருக்கும்போதே யாரோ கோபத்தில் தொலைபேசியை டங்கென்று வைக்கும் சத்தம் கேட்டது. குட் என்று நினைத்து விட்டு கடிதத்தில் பார்வையை மீண்டும் செலுத்தினாள்.

"அன்பின் அம்மாவிற்கு!" இது அவள் எதிர் பார்க்காத ஆரம்பவரிகள்... அந்த வரிகளை மீண்டும் மீண்டும் மீண்டு வாசித்தாள். வயிற்றில் இனம் புரியாத உணர்வு ஒன்று எழுந்தது. மிகுதியை வாசிக்க முடியவில்லை அவளுக்கு. கண்களில் அவளை அறியாமல் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்... என்ன இது அந்த அம்மா என்றா சொல்லுக்கு இவ்வளவு சக்தியா? மீண்டும் பார்வையை செலுத்தினாள் கடிதத்தில். " அம்மா நீங்கள் அனுப்பிய கடிதமும் பிறந்தநாள் கார்ட்டும எனக்கு கிடைத்தது. சந்தோசமாய் இருந்தது. உலகில் எனக்கு யார் இருக்கிறாங்க என்று நினைத்த எனக்கு ஆறுதலாக... என்னை கவனித்துக்கொள்ளும் அன்னையாக எனக்கு கிடைத்தீர்கள்... என் முகம் கூட காணாமல் என்னை வழிநடத்தும் உங்களை பெற்றுக்கொண்டதுக்காக நான் சந்தோசப்படுகிறேன். இறவனுக்கு நன்றி கூறுகிறேன்.... ஆனாலும் சிறு கவலையும் கூட இருக்கிறது.... எனக்கு நல்ல அம்மாவாக நீங்கள் கிடைத்திருப்பது போல் ஏன் இங்கு இந்த முகாமில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கலை?? உதவிக்கு நன்றியோடும் முகாமில் இருக்கும் மற்றவர்களுக்கும் என்னைப்போல் ஒரு அம்மா கிடைக்குமா? என்று கேள்விக் குறியோடும் அந்த கடிதத்தை முடித்திருந்தது அந்தக் குழந்தை.

ம்ம்.......... எனக்கு கிடைத்த அம்மா போல் மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்காதா? என்றா கேள்விக்கு சுமதிக்கு பதில் தெரியவில்லை.
அப்போது தான் அவளுடைய குடும்ப வைத்தியார் எல்லாவித மருத்துவ சேக்கப்பையும் முடித்து இனி உனக்கு அம்மா பாக்கியம் ஆகும் சந்தர்ப்பம் குறைவு என்று நமட்டு சிரிப்புடன் சொல்லி தந்த மருத்துவ அறிக்கை அவளைப் பார்த்து சிரித்தது. நாளைக்கு கட்டாயம் டொக்டரிடம் போய் இந்த கடிதத்தை காட்டவேண்டும். எனக்கு அம்மா பாக்கியம் கிடைத்து விட்டது என்று சொல்லி அந்த நமட்டுச்சிரிப்பை நானும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து விட்டு கடித்தத்தை மீண்டும் படிக்க தொடங்கினாள்.

Labels:

posted by நந்தியா @ 6:38 PM 9 comments
ஒரு கதை
சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்ல மொழி பேசியவள் தான் இந்த விது. அப்பா சாப்பிடும்போதும் சரி அம்மா சாப்பிடும்போதும் சரி இல்லாவிடின் அம்மம்மா சாப்பிடும்போதும் கூட ஒரு பிடி உண்பாள். ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்லை.

பாடசாலை பருவமும் வந்தது. படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. ஆனால் ஆசிரியர்களிடம் அடி வேண்டும் சந்தர்ப்பங்கள் குறைவு தான். பருவ வயதையும் அடைந்தும் விட்டாள். நாட்டின் நிலமை காரணமாக ஒவ்வொரு அண்ணண்மாரும் கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு என்ன நாட்டையே விட்டு போனார்கள். ஒரு அதிகாலை பொழுதில் அம்மம்மாவும் இயற்கையை ஏய்தி விட்டார். கடைசியில் எஞ்சியது அப்பாவும் அம்மாவும் அவளும் தான். அண்ணன்மார்களின் நக்கல் பேச்சுக்களை கோபத்துடனே ரசித்து வந்தவளுக்கு எல்லாமே வெறுமையாகின.

அண்ணன்மார்களும் போன நாட்டில் இருந்து வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போட்டார்கள். கடிதத்துடனே அழகான படங்கள். காருடன் நின்று ஓரு படம். மாடிப்படிகளில் நின்று இன்னொரு படம். அழகான புற்றரையில் நின்று ஓரு படம் என்று வீட்டிலிருக்கும் அல்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் வெகு சீக்கிரம் உங்களையும் இவ்விடம் அழைத்து விடுவோம் என்கின்ற வேதவாக்கியங்கள் வேறை. அன்புக்கு பதிலாக பணம் வீட்டில் கொட்டத் தொடங்கியது. ஆகா இனி இங்கு படித்து என்ன செய்ய போகின்றேன்? விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆங்கிலம் தானாகவே வந்து நாக்கில் ஒட்டுக்கொள்ளும் என்ற நினைப்பில் படிப்பில் கொஞ்சம் இருந்த ஆர்வத்தையும் இழந்தாள். கனவு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். ஒவ்வொரு உடுப்புக்களும் வாங்கும் போதும் கனடாவிற்கு கொண்டு போக கூடிய உடுப்பாக தான் வாங்குவாள். கனடா போனால் இவர்கள் எல்லாம் எதற்கு என்ற எண்ணத்துடன் நெருங்கி வந்த தோழிகள் எல்லோரையும் விட்டு விலத்தினாள்.

ஓரு அழகான காலை நேரத்தில் பூந்தோட்டத்தில் அழகாக பூத்து குலுங்கியிருந்த ரோஐh பூவைப்பார்த்து தன்னையே மறந்து நின்றாள். காகங்கள் கரைந்து கொண்டு இருக்கையில் வானத்தில் ஒரு இரைச்சல். அந்த இரைச்சல் பேரிரைச்சலாக மாறி ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்டது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது. சிறு துளி ஒன்று முகத்தில் பட துடித்து எழுந்தாள். எங்குமே புழுதி மண்டலமாக இருந்தது. அழுகைக்குரல் அந்த பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருந்தது.

தனது முகத்தில் பட்ட துளியை தடவி பார்த்தாள். ஐய்யோ என்ன இது இரத்த துளி எல்லோ என்று அதிர்ந்தாள். நினைவு வந்தவளாக அம்மா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுப்பக்கம் ஒடினாள். ம்ம் அம்மா அப்பா சிரித்தபடியே ஒருவர் மேல் ஓருவர் தலைசாய்ந்து படுத்து இருந்தனார் எப்பவும் முகத்தை கடுமையாக வைத்திருக்கும் அப்பா கூட அன்று சிரித்தபடி படுத்திருந்தார். அந்த முற்றத்து மல்லிகை முற்றாக கருகிக் கிடந்தது. ஒடி வந்து பெற்றோரை கட்டி அணைத்து அழுதாள். அழுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் அம்மா அப்பா இனி உயிருடன் இல்லை என்ற உண்மை மட்டும் அவளுக்கு மனதில் உறைத்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? இவளின் வீட்டில் இருவர் சாவு என்றால் பக்கத்து வீட்டு சாமினி அக்கா வீட்டில் மூவர்.

கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்? இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில்.


சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா? அம்மாக்கும் அப்பாவிற்கும் வித விதமான படங்கள் அனுப்பும் அண்ணண்மார்கள் பெற்றோரின் உடலை சாம்பலாக கூட பார்க்க இயலாமல் இருக்கும் என்பதை அறிந்து இருப்பார்களா? இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? சிங்களவன் நம்மை அடிமைபடுத்தியதாலா? எனது வீடு எனது சொந்தம் என்று நமக்கு நாமே ஓரு வட்டம் போட்டு இருந்தது தான் காரணமா? இன்று உறவுகளை இழந்து தனிமரமாக நான் நாளை யாரோ? இதற்கு முடிவே இல்லையா? என்று யோசித்தவள் கண்ணீரை துடைத்தாள். புது உணர்வு முகத்தில் தெரிந்தது. "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு" என்ற பாடல் வரிகள் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருந்தது.

Labels:

posted by நந்தியா @ 6:37 PM 0 comments
Friday, April 27, 2007
ஒய்ங்ங்ங்ங்ங்... காதுக்கை கோச்சி ஓடுது
"திரி திரி என திரிந்து படி படி என படித்து ஒல்.எல்லில் ஆல் எப் எடுத்து
காலையும் மாலையும் ரீயுசன் வீட்டிற்கு வந்தால் ரீவிசன்றோட்டிலை இருவர் செல்வதும் பாஷான்"

இந்த பாடல் வரிகளை உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள்? நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகளின் சிறந்த சித்திகளுக்கு முக்கிய காரணம் வகிப்பது நம்ம ரீயுசன்கள் என்று சொன்னால் மிகையாகது. அதனை கருத்தில் கொண்டு தான் இந்த வம்பு கவிஞன் இந்தக் கவிதையை உருவாக்கியிருப்பான் போலும். இதன் பல வரிகள் இப்போ மறந்து போச்சு.

அட அட 3ம் வகுப்பு தொடங்கியவுடனே ஸ்கொலர்சிப் பரீட்சைக்கு ரீயுசன் என்று சொல்லி வெளிக்கிட்டால் அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். ரீயுசனுகளிலும் பல வகை அத்தனையும் தனி வகை. கணிதப் பாடத்திற்கு ஊரின் கிழக்குப் பக்கம் போகவேண்டும். பின்னர் ஆங்கிலப் பாடத்திற்கு ஊரின் வடக்குப் பக்கம் போகவேண்டும். அதை விட டான்ஸ் கிளாஸ் மியூசிக் கிளாஸ்க்கு ஊரின் மேற்குப் பக்கம் தெற்குப் பக்கம் என்று ஊரின் எல்லாப் பக்கமும் ஒரே நாளில் குறைந்தது ஒரு தடவை என்றாலும் சுற்றி வந்த பெருமை எம்மைத்தான் சாரும். (நல்ல காலம் ஊரின் தென்கிழக்கு பகுதியில் இருந்த வயலின் கிளாசையும் அதற்கு நேர் எதிராக இருந்த வீணை கிளாசையும் விட்டு வைத்து விட்டோம்) விடுமுறை நாட்களில் மட்டுமா ஓட்டம் நடக்கும்? பாடசாலை நாட்களில் காலை 6.00 க்கு கணித பாடத்திற்கு ரீயுசன் என்று வெளிக்கிடவேண்டும். விடியற்காலை முகம் கழுவியது பாதி கழுவாதது பாதி ரீ குடித்தது பாதி குடியாதது பாதி என்று வெளிக்கிட்டு போய் அங்கிருந்து விடிய 7 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்தது பாதி குளியாதது பாதி சாப்பிட்டது பாதி சாப்பிடாதது பாதி என்று பாடசாலைக்கு ஓட்டம். பாடசாலையால் வந்து மிகுதி ஓட்டம்.சனி ஞாயிறு தினங்களில் சொல்லத்தேவையில்லை. அதுவும் சனிக்கிழமைகளில் மூச்சு விடக் கூட நேரம் இல்லாமால் ஓடுவோம். கடைசியாக தாயகத்தில் 7ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது சனிக்கிழமைகளை மறக்க முடியாது. விடிய 7 மணிக்கு தமிழ் பாடத்துடன் வகுப்புக்கள் ஆரம்பமாகும். பின்னர் 30 நிமிட இடைவெளியில் அடுத்த ஆங்கிலப் பாடம் ஆரம்பமாகும். பின்னர் 1 மணி நேர இடைவெளியின் பின் எனக்குப் பிடிக்காத விஞ்ஞானப் பாடம் தொடங்கும். ( இந்த 30 நிமிட 1 மணித்தியாலா இடைவேளைகளின் போது நாம் புரிந்த சாதனைகள் அளப்பரியது. அதைப்பற்றி மற்றொரு பதிவில் விளக்கமாக எழுதுகின்றேன்.) கடைசியாக 2 மணியளவில் தான் வீட்டிற்கு வர நேரம் கிடைக்கும். வந்தவுடன் நேரடியாக கிணற்றடிக்குப் போனால் அங்கு எல்லோரும் முழுகி விட்டு நமக்கு என்று மிச்சம் வைத்த சீயாக்காய் (சிகைக்காய்) கொஞ்சம் இருக்கும். அதை எடுத்து தலையில் வைக்க அம்மம்மா வந்துவிடுவா தலை தேய்க்க. அவா தேய்க்கும் தேய்ப்பில் உள்ள பேன்கள் எல்லாம் செத்து விடும். பின்னர் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம். மீண்டும் 4 மணிக்கு ஓட்டம் ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் அமைதியாகப் போகும். ஆனால் அடுத்த நாள் பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள் செய்து முடிக்க வேண்டியிருப்பதால் அந்த நாளும் ஓட்டமாகத்தான் முடியும்.ஊரில் கர்த்தால் வந்தால் தான் நமக்கு சந்தோசம். கொஞ்சம் ஓய்வு என்றும் சொல்லலாம். அன்று தான் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலடிக்கு விளையாடப்போவது. அதுவும் வீட்டில் கொஞ்சக் கணக்கு செய்து போட்டுத் தான் போகலாம். அப்படி போனாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டை போய் விடணும். இல்லாட்டி அம்மம்மாவின் திட்டுக்கு ஆளாக வேண்டி வரும்.

அம்மம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை இது தான் "பாலாப்பழம் போல மாறி மாறி எல்லா ரீயுசனுக்கும் காசைக் கொண்டு போய் கொண்டுவது பின்னர் விளையாட திரி" என்று. இப்படியாக இந்த ரியூசனால் வேண்டிய திட்டு கொஞ்சம் இல்லை. ரியூசனுக்கு லீவு எடுப்பது என்றால் ஒன்றில் தலையைப் பிடித்து தலையிடி என்று படுக்க வேணும் இல்லாட்டி வயித்தைப் பிடித்து வயித்து வலி என்று சொன்னால் தான் நிற்கலாம். இன்னொரு காலத்தில் வீட்டில் ஏதாவது பொய் சொல்லி நின்றாலும் அடுத்த நாள் ரியூசன் வாத்தியிடம் அடி வாங்குவதை நினைத்தே பயத்தில் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தோம். அதுவும் விஞ்ஞான வாத்தி பிரபாகரன் என்று பெயர். பலருக்கு அவரைத் தெரிந்திருக்கும். (சென்ஜோன்ஸ் இல் படிப்பித்தவர்) காதுக்கை கோச்சி (இரயில்) ஓட வைப்பார்.
ஆளை கண்டாலே நடுங்கும். அதுவும் இடப்பெயர்வு காரணமாக நமது வீட்டிற்கு பக்கத்திலே குடியிருந்தவர். அதற்கு பிறகு வீட்டில் கத்தி கதைக்கவே பயம். (ஆனால் வீட்டுகாராருக்கு ரொம்ப சந்தோசம்)

இப்படியாக இந்த ரீயுசனால் நாம் அனுபவித்த இன்னல்கள் இன்பங்கள் இரண்டுமே கொஞ்சம் நஞ்சமல்ல. இன்னும் எழுதலாம் ஆனால் வாசிக்கின்ற உங்களை அலுப்படிக்க விரும்பலை. இன்னும் ஒரு பதிவில் சந்திப்போம்.
posted by நந்தியா @ 9:23 PM 8 comments
Wednesday, April 11, 2007
வாடா மல்லி ஆ ? வாடாமல்லிகையா ?
எது சரி???
posted by நந்தியா @ 8:38 AM 12 comments
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER